ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு... கணக்கில் வராத ரூ.6 கோடி... பெலிவர்ஸ் சர்ச்சுக்கு சொந்தமான 66 இடங்களில் சோதனை

ஹவலா மோசடியில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சுக்கு ((Believer’s Eastern Church)) சொந்தமான 66 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டாவது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது.
கேரளாவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் பெலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதற்காக வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான நன்கொடைகளைப் பெறுகிறது. அப்போது, ஹவாலா முறையில் பணம் கைமாறியதாகவும், வரி விலக்கு உள்ள நிதியை சட்டவிரோதமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் சர்ச் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த சர்ச் குழுமத்தின் 30 அறக்கட்டளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து சுமார் 6,000 கோடி ரூபாய் நிதி வந்ததாகவும், அதில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தமிழகத்தில் 3 இடங்களிலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள் என்று 63 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பெயரளவில் பல போலி அறக்கட்டளைகள் செயல்பட்டதும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அறக்கட்டளை மூலம் கைமாறியது குறித்த ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, 2008 ம் ஆண்டே பெலிவர்ஸ் சர்ச் 18 ஆண்டுகளில் ரூ.1000 கோடிக்கும் மேல் வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, 2017 -ம் ஆண்டில் அதை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்ததோடு அத்துடன் தொடர்புடைய மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெறவும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Comments