தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் வரும் 17 ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நோய் தொற்று பரவுவதை தடுக்க திருமணம், அவசர மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ பாஸ் அனுமதி எவ்வித தாமதமும், தடையும் இன்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ பாஸ் விண்ணப்பித்து பெற்று பயணிக்க அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர, தற்போது உள்ள நடைமுறைப்படியே இ பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Comments