பெங்களூரு கலவரம் - 3 பேர் பலி..!

பெங்களூருவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் அகண்ட ஸ்ரீநிவாசமூர்த்தி. இவரது உறவினர் என கூறப்பட்ட நவீன் என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேஸ்புக்கில் தகவல்களை பதிவிட்டதாக கூறி, எம்எல்ஏ வீட்டு முன்பாக நள்ளிரவில் ஒரு கும்பல் போராட்டம் நடத்தியது.
போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்எல்ஏவின் வீட்டின் சில பகுதிகளுக்கும் தீ வைக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் கலவரம் மூண்டது.
தகவல் அறிந்து பெங்களூர் காவல் ஆணையர் கமல் பந்த் தலைமையில் வந்த போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல காவலர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நபரை கைது செய்து விட்டதாகவும், ஆனால் அவர் எம்எல்ஏ-யின் உறவினர் அல்ல என்றும் கூறி போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.
அதை அடுத்து, குறிப்பிட்ட நவீன் என்பவர் போலீசாரின் பாதுகாப்பில் இருக்கலாம் என நினைத்து கே ஜி ஹள்ளி மற்றும் டி ஜே ஹள்ளி காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அங்குள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகளை போட்டு அவர்கள் வாகனப் போக்குவரத்தை தடுத்தனர். காவல் நிலையங்கள் மீது கற்கள் மற்றும் குப்பிகளால் அவர்கள் தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.
நிலைமையை கட்டுப்படுத்த வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல் ஆணையர் தெரிவித்தார். அதில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 போலீசார் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு நகரம் முழுதும் 144 தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி பிரமுகர் முசம்மில் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே எம்எல்ஏயின் வீடு முன்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள், பேஸ்மென்ட் பார்க்கில் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 300 வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், கலவரம் திட்டமிட்ட ஒன்று என்றும் கர்நாடக அமைச்சர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், கலவரம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments