சென்னை அண்ணாசாலையில் கட்டட சுவர் விழுந்து பலியான ஐ.டி.ஊழியர் பத்மபிரியாவின் உடற்கூராய்வு முடிந்து, அவரின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு ஆம்புலன்சில் உடல் கொண்டு செல்லப்பட்டது.
பழமையான தனியார் கட்டத்தை இடிக்கும்போது, சுவர் இடிந்து, சாலையில் நடந்து சென்ற பத்மபிரியா மீது விழுந்ததில், அவர் உயிரிழந்தார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, பத்மபிரியாவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்தனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து வெளியே கொண்டுவரப்பட்ட உடலை பார்த்து, பத்மபிரியாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பத்மபிரியாவின் தந்தை முருகேசன், படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளோடு கடந்த மாதம் தனது மகள் சென்னை வந்ததாகவும், தற்போது சடலமாக ஊருக்கு திரும்புவதாகவும் கூறி கதறி அழுதார்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்டிடத்தின் உரிமையாளர் சையத் அலி பாத்திமாவின் சிறிய மாமனார் ஜாகிர் உசேன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.