முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளார். அப்போது தமிழகத்தின் திட்டங்களுக்கான கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.
இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்ததற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழகத்திற்கான, கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 17ம் தேதி இரவு 8.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.