அதிவேகத்தில் பைக் ஓட்டி சவால் விட்டு வீடியோ பதிவிட்ட யூடியூப்பர் ttf வாசன் பைக்கில் பெங்களூர் தப்பிச்செல்ல முயன்ற போது சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வேறு ஒருவருக்கு சொந்தமான பைக்கை தனது பைக் என்று போலீசாரிடம் போர்ஜரி செய்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சொந்த காசில் செய்வினை வைத்துக் கொள்வது போல சும்மா போன ஜிபி முத்துவ கூப்பிட்டு பைக்கில் ஏற்றி 150 கிலோ மீட்டருக்கும் அதிவேகமான வேகத்தில் பைக்கை முறுக்கி வாண்டடாக சென்று போலீசில் இரு வழக்குகள் வாங்கியவர் யூடியூப்பர் ttf வாசன்..!
கோவையில் தான் செய்வது சட்ட விரோதம் என்பதை மறந்து , சாகசத் திமிறில் வீடியோ பதிவிட்டதால் போத்தனூர் போலீசார் பதிவிட்ட வழக்கில் மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் ttf வாசன். அவருக்கு எதிராக சூலூர் போலீசார்,அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை ஓட்டுதல் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவருக்கு ஹெல்மெட் தலைக்கவசம் அணிவிக்காமல் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் பெங்களூரு தப்பிச்சென்ற ttf வாசனை மடக்கிப்பிடித்து கைது செய்த சூலூர் காவல்துறையினர், அவரை இரு சக்கர வாகனத்துடன் நிற்க வைத்து போட்டோ எடுத்தனர். அப்போது தான் கெத்து என்பதை காட்டுவதற்காக விரல்களை விரித்துக் காட்டினார் ttf வாசன்..!
அருகில் நின்றிருந்த காவல் ஆய்வாளர் மாதையனோ, தம்பி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்காத, பேசாம வந்து அரெஸ்ட் பெயில் வாங்கிட்டு ஓடிபோயிறுடா என்று சிரித்துக் கொண்டே எச்சரித்தார்.
இதையடுத்து இரு நபர் உத்தரவாத பத்திரம் கொடுத்ததன் பேரில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎஃப் வாசன் , ஏதோ ஓட்டலுக்குள் புகுந்து பூரியும் வடையும் சாப்பிட்டு விட்டு வந்து ரிவியூ சொல்வது போல பேச ஆரம்பித்தார்.
சாலையை விதியை மீறி அதிவேகத்தில் சென்றது குறித்து கேட்ட போது கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைத்து கொள்ள முடியும் என்ற வாசனிடம், நீயூஸ் சேனல்களிடம் உங்க பவரை காண்பிக்க போறேன்னு சொன்னீங்களே காட்டுங்க என்றதும் அப்படியெல்லாம் சொன்னது கிடையாது என்று பம்மினார்.
தற்போது கூட போலீசாரிடம் போர்ஜரி செய்வது போல உங்கள் வாகனத்திற்கு பதில் வேறு ஒருவரின் வாகனத்தை கொண்டு வந்தது ஏன்? என்று கேட்டதும் விட்டால் போதும் என்று நடையை கட்டினார் பைக்கர் வாசன்..!
சூலூர் போலீசாரிடம் தான் அதிவேகமாக ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளுக்கு பதில் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை ஒப்படைத்த வாசன், தான் அதிவேகமாக ஓட்டிய பைக் பெங்களூருவில் இருப்பதால் அதனை எடுத்து வந்து ஒப்படைப்பதாக கூறிச்சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.